வெயிலில் பணியாற்றும் போக்குவரத்துக் காவலர்களுக்கு மோர்
கோபிசெட்டிபாளையத்தில் கோடை வெயிலில் பணியாற்றும் போக்குவரத்துக் காவலர்களுக்கு மோர் வழங்கும் திட்டத்தை கோபி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணசாமி மோர் வழங்கினார்.
கோடை வெயிலில் பணியாற்றும் போக்குவரத்துக் காவல் துறையினருக்கு மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கோடைக் காலத்தில் கடும் வெயிலில் நின்று போக்குவரத்தை சீர் செய்யும் போக்குவரத்துக் காவல் துறையினருக்கு, காவல் துறையின் சார்பிலேயே மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து சிக்னலில் பணியாற்றும் போக்குவரத்துக் காவல் துறையினருக்கு கோபி உட்கோட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணசாமி மோர் வழங்கி திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், கோபி காவல் நிலைய ஆய்வாளர் சோமசுந்தரம், போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.