சென்னிமலை அருகே நஞ்சுண்டேசுவரர் கோயிலில் பங்குனி மாத சிறப்பு வழிபாட்டையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னிமலையை அடுத்த நஞ்சுண்டாபுரத்தில், நஞ்சுண்டேசுவரர் கோயில் உள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புலிங்கமாக உருவான நஞ்சுண்டேசுவரருக்கு கண்ணடக்கம், கண் மலர் ஆகியவற்றை காணிக்கையாக வழங்கி வழிபட்டால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும் என்பது ஐதீகமாகம்.
இக்கோயிலில், பங்குனி மாதம் திங்கள்கிழமை மற்றும் கார்த்திகை மாதத்தில் வரும் கடைசி இரண்டு திங்கள்கிழமைகளில் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு பங்குனி மாதத்தின் முதல் திங்கள்கிழமையான கோயில் நடை திறக்கப்பட்டு நஞ்சுண்டேசுவரருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும் கோயில் வளாகத்தில் உள்ள பழனி ஆண்டவருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
விழாவில், ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில், ஊத்துக்குளி கைத்தமலை முருகன் கோயில் பணியாளர்கள் மற்றும் நஞ்சுண்டாபுரம் ஊர் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர். பக்தர்களின் வசதிக்காக சென்னிமலை, ஊத்துக்குளி, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.