கோபிசெட்டிபாளையம் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.3 லட்சத்தை தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தலையொட்டி தீவிர கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் 3 பறக்கும் படையும், 3 கண்காணிப்புக் குழுவும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணைப் பிரிவில் அலுவலர் பவானி தலைமையில் உதவி ஆய்வாளர் செல்லதுரை, தலைமைக் காவலர் ஜெகநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சத்தியமங்கலத்தில் இருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கி வந்த காரில் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.3 லட்சத்து 2 ஆயிரம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த கண்காணிப்புக் குழுவினர் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அசோகனிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில், சிங்கிரிபாளையத்தைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவர், தான் வாங்கிய நிலத்துக்காக பத்திரப்பதிவு செய்ய சத்தியமங்கலம் பதிவுத் துறை அலுவலகம் பணம் சென்றதாகவும், அங்கு இணையதளத்தில் விண்ணப்பம் நிறைவடைந்து விட்டதால், பணத்தை திரும்பக் கொண்டு வந்ததாக தெரிவித்தார்.
மேலும் வங்கியில் இருந்து பணம் எடுத்தற்கான ஆவணங்கள் உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, வங்கி ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை திரும்பப் பெற்றுச் செல்லுமாறு கோட்டாட்சியர் தெரிவித்தார்.