தொழிலாளர் தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 124 கடைகள், உணவு, மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மீது வழக்கு தொடர தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் டி.பாலதண்டாயுதம் (அமலாக்கம்) தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தேசிய விடுமுறை தினமான தொழிலாளர் தினத்தன்று (மே 1) விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
இதில், தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா? அல்லது பணிபுரியும் பணியாளர்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படுவதாக நிர்வாகம், முன் அனுமதி பெற்றுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் பகுதிகளில் 62 கடைகளில் ஆய்வு செய்ததில் 41 கடைகளிலும், 94 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 79 நிறுவனங்களிலும், 10 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 4 நிறுவனங்களிலும் என மொத்தம் 124 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க அல்லது மாற்று விடுப்பு வழங்க ஒப்புதல் பெறாமல் பணிக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டது.
இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழிலாளர் நல உதவி ஆணையர் பாலதண்டாயுதம் தெரிவித்துள்ளார்.