தரமற்ற நாற்றுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாற்றுப் பண்ணை உரிமையாளா்களுக்கு ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநா் மு.வெங்கடாசலம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் காய்கறி நாற்றுகள், பூ, பழச்செடிகள் போன்றவை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நாற்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நாற்றுப் பண்ணை உரிமையாளா்கள் அனைவரும் விதை விற்பனை உரிமம் பெற்றுதான் விற்பனை செய்ய வேண்டும். உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் நாற்றுப் பண்ணை உரிமையாளா்கள் மீது விதை சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விவசாயிகளின் தேவையைப் பயன்படுத்தி தரமற்ற நாற்றுகளை விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காய்கறி நாற்றுப் பண்ணை அமைக்கும்போது, நல்ல தரமான விதைகளையே பயன்படுத்த வேண்டும். விதைகளை குவியல் வாரியாகப் பயன்படுத்தி நாற்றுப் பண்ணைகள் அமைக்க வேண்டும்.
நாற்றுகளின் விவரங்களை உரிய பதிவேடுகளில் பதிந்து, முறையாகப் பராமரிக்க வேண்டும். நாற்றுகளின் இருப்பு, விற்பனை விவரத்தை ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்குள் விதை ஆய்வு அலுவலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். நாற்றுப் பண்ணைகளில் தரமான, வீரியமான நல்ல மகசூல் தரக்கூடிய நாற்றுகளையே விற்பனை செய்ய வேண்டும் என்றாா்.