குடியிருப்புப் பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்த குரங்குகளை கூண்டு வைத்து வனத் துறையினர் பிடித்துச் சென்றனர்.
சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளதாவும், குடியிருப்புகளில் புகுந்து சமையல் பொருள்களை தின்று சேதப்படுத்துவதாகவும் வனத் துறையினருக்குப் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வனத் துறையினர் குரங்குகள் அட்டகாசம் செய்யும் பகுதிகளை ஆய்வு செய்தனர். சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை வீரபத்திரா கோயில் சுற்றுப்புற குடியிருப்பு பகுதியில் 5 க்கும் மேற்பட்ட குரங்குகள் வீடுகளில் புகுந்து தின்பண்டங்கள், காய்கறிகளை தின்று சேதப்படுத்தின. வீட்டின் மேற்கூரைகளின் மேல் அமர்ந்து ஓடுகளைப் பிரித்து அட்டகாசம் செய்தன.
இதையடுத்து, குரங்குகள் அட்டகாசம் செய்யும் நடராஜ் என்பவரின் வீட்டின் முன்பு குரங்குகளைப் பிடிக்க வனத் துறையினர் கூண்டு வைத்து அதில் பழங்களை வைத்தனர். அப்போது பழங்களைத் திண்பதற்கு வந்த குரங்குகள் புதன்கிழமை கூண்டில் சிக்கிக் கொண்டன. அந்த கூண்டில் இருந்து மற்றொரு கூண்டில் குரங்கை வைத்து பண்ணாரி வனப் பகுதியில் கொண்டு சென்றுவிட்டனர். தினந்தோறும் 3 குரங்குகள் பிடிபடுவதாகவும், அனைத்து குரங்குகளையும் பிடித்து வனப் பகுதியில் விடப்படும் எனவும் வனத் துறையினர் தெரிவித்தனர்.