சத்தியமங்கலம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம், சிறுமுகை நால்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். கூலி தொழிலாளியான இவர் தனது மனைவி கார்த்தீஸ்வரி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பண்ணாரிஅம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பவானிசாகர் செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை திரும்பி வந்து கொண்டிருந்தார். தயிர்பள்ளம் அருகே உள்ள காமதேனு நகர் அருகே சென்ற போது பின்னால் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இருவர் கார்த்தீஸ்வரியின் கழுத்தில் இருந்த நான்கரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு வேகமாகச் சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சிடையந்த சரவணன் உடனடியாக பவானிசாகர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், தயிர்பள்ளம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் டி சர்ட் அணிந்தபடி பதிவு எண் எழுதப்படாத புதிய பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி இருவர் சென்ற காட்சி பதிவாகியுள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு சத்தியமங்கலம் அருகே சிவியார்பாளையம் பகுதியில் ஸ்கூட்டரில் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிக்க முயன்ற சம்பவம் நடைபெற்ற நிலையில் மீண்டும் இன்று பவானிசாகர் பகுதியில் சங்கிலி பறிப்புச் சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.