சித்திரைக்கனி விழாவையொட்டி ஈரோடு காய்கறி சந்தையில் பொதுமக்கள் அதிக அளவில் பழங்கள் வாங்கிச் சென்றதால் விற்பனை அதிகமாக இருந்தது.
சித்திரை மாதப் பிறப்பை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர். இந்நாளில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் இறைவனுக்கு பழங்களைப் படைத்து குடும்பத்துடன் வழிபடுவது வழக்கம்.
இதையொட்டி, ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள பழக்கடைகளில் பழங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றன.
ஈரோட்டில் சனிக்கிழமை விற்பனையான பழங்களின் விலை விவரம் (1 கிலோ): பலாப்பழம் ரூ.160, ஆப்பிள் ரூ.150, ஆரஞ்சு ரூ.70, திராட்சை ரூ.80, மாம்பழம் ரூ.60, மாதுளை ரூ.80, சப்போட்டா ரூ.50 ஆகும். இதேபோல், வாழைப்பழம், எலுமிச்சை உள்ளிட்ட பழங்களின் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டன.
இதுகுறித்து ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தை வியாபாரிகள் கூறியதாவது: கோடைக் காலம் என்பதாலும், கடந்த ஆண்டைவிட பழங்களின் விலை குறைந்துள்ளதாலும் பொதுமக்கள் தற்போது அதிக அளவில் பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.
மேலும், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டும் இறைவனுக்கு படைக்க பொதுமக்கள் அதிக அளவில் பழங்கள் வாங்கிச் சென்றதால் விற்பனை அதிகமாக இருந்தது என்றனர்.