மாநில அளவிலான யோகா போட்டியில் முதலிடம் பெற்ற குமுதா பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
கோவை கணபதியில் உள்ள ஓசோன் யோக மையத்தில் மாநில அளவிலான யோகா போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இப் போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இந்தப் போட்டியில் நம்பியூர் குமுதா பள்ளியைச் சேர்ந்த 23 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். இதில் முதலிடம் பெற்ற 9 மாணவ, மாணவிகள் அந்தமான் நிக்கோபர் தீவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிக்கும், 3 மாணவ, மாணவிகள் சிங்கப்பூரில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளனர்.
தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தேர்வாகி உள்ள மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளர் கே.ஏ.ஜனகரத்தினம், இணைத் தாளாளர் சுகந்தி, செயலர் டாக்டர் அரவிந்தன், இணைச் செயலர் டாக்டர் மாலினி, முதல்வர் மஞ்சுளா, தலைமையாசிரியை வசந்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.