சத்தியமங்கலத்தை அடுத்த மல்லியம்துர்க்கம் மலைக்கிராமத்தில் சாலை வசதி அமைக்கப்படாததால் வரும் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அக்கிராம மக்கள் சார்பில் துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப் பகுதியில் அடர்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ளது மல்லியம்மன்துர்கம் கிராமம். 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால் கடம்பூரிலிருந்து அடர்ந்த வனப் பகுதி வழியாக 7 கிலோமீட்டர் தொலைவு நடந்து செல்லவேண்டும். இங்கு வசிக்கும் மக்கள் மானாவாரியாக ராகி, அவரை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடுவதோடு இங்கு விளையும் கொய்யா மற்றும் பலாப்பழங்களை தலையில் சுமந்தபடி கடம்பூர், கெம்பநாயக்கன்பாளையம் பகுதிக்கு கொண்டுவந்து விற்பனை செய்து வாழ்ந்து வருகின்றனர்.
மின்சாரம், சாலை வசதி இல்லாத இந்த கிராமத்துக்கு தற்போது சோலார் விளக்குகள் பொருத்தி மின்வசதி செய்யப்பட்டுள்ளது. கடம்பூரிலிருந்து மல்லியம்மன்துர்கம் வரை உள்ள அடர்ந்த வனப் பகுதியில் சாலை அமைக்க வனத் துறை அனுமதி வழங்க மறுப்பதால் இக்கிராம மக்களின் கோரிக்கை தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில் மல்லியம்மன் கிராம மக்கள் சார்பில் "வாக்களிக்க மாட்டோம்' என்ற தலைப்பிலான துண்டுப் பிரசுரம் சத்தியமங்கலம், கடம்பூர் மலைப் பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதில் பல ஆண்டுகளாக சாலை வசதி கேட்டு மனு அளித்தும் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வனவிலங்குகள் வசிக்கும் அடர்ந்த வனப் பகுதியில் எந்தப் பாதுகாப்புமின்றி வாழ்ந்து வருகிறோம். உடல்நிலை சரியில்லாதவர்கள் மற்றும் கர்ப்பிணிகளைத் தொட்டில் கட்டி தூக்கிச் செல்லவேண்டிய அவல நிலை உள்ளதால் மல்லியம்மன் துர்க்கம் கிராமத்திற்கு சாலை வசதி செய்து தரும் வரை தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.