திம்பம் மலைப் பாதையில் சடலம் ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
கர்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து சடலம் ஏற்றிய தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனம் கேரள மாநிலம், திருவனந்தபுரம் செல்வதற்காக திம்பம் மலைப் பாதை வழியாக திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தது. ஆம்புலன்ஸை மைசூரைச் சேர்ந்த ஓட்டுநர் மனு (25) ஓட்டிச் சென்றார்.
திம்பம் மலைப் பாதை 7 ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது, ஆம்புலன்ஸ் வாகனம் பிரேக் பிடிக்காமல் சாலையோரம் நின்றிருந்த சரக்கு லாரி மீது மோதியது. இதில் ஓட்டுநர் மனு லேசான காயத்துடன் உயிர்தப்பினார். இதையடுத்து ஆம்புலன்ஸில் இருந்த சடலம் மாற்று ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து ஆசனூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.