தேர்தல் புறக்கணிப்பு துண்டுப் பிரசுரம் அச்சடித்த அச்சக உரிமையாளர் மற்றும் மல்லியம்மன் துர்க்கம் விவசாயி ஆகியோர் மீது கடம்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப் பகுதி மல்லியம்மன்துர்கம் கிராமத்தில் சாலை வசதி செய்து தரப்படாததால் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக துண்டுப் பிரசுரங்கள் கடம்பூர் மலைப் பகுதி, சத்தியமங்கலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டன.
இதுகுறித்து கடம்பூர் போலீஸார், வருவாய்த் துறை அதிகாரிகள் மல்லியம்மன்துர்கம் கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் விசாரித்தபோது, தாங்கள் துண்டுப் பிரசுரம் அச்சடிக்கவில்லை எனக் கூறியுள்ளனர்.
இதையடுத்து மல்லியம்மன் துர்கம் கிராமத்தைச் சேர்ந்த கல்கடம்பூர் பகுதியில் வசித்து வரும் சுப்பிரமணி (52) என்பவர் மல்லியம்மன் துர்கம் கிராம பொதுமக்களைக் கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து துண்டுப் பிரசுரம் அச்சடித்து விநியோகித்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளதால் அனுமதியின்றி துண்டுப் பிரசுரம் அச்சடித்த சத்தியமங்கலத்தைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் ஹரி (55), விவசாயி சுப்பிரமணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடம்பூர் காவல் நிலையத்தில் குத்தியாலத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் புகார் தெரிவித்தார். இதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.