அதிமுக மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்: அமைச்சர் கே.சி.கருப்பணன்
By DIN | Published On : 17th April 2019 08:30 AM | Last Updated : 17th April 2019 08:30 AM | அ+அ அ- |

அதிமுக மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்து இருக்கின்றனர் என்றார் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்.
ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜி.மணிமாறன் ஈரோடு மாநகரப் பகுதிகளில் இறுதிகட்ட பிரசாரத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டார்.
ஈரோடு அரசு மருத்துவமனை முன்பு நடந்த பிரசார நிறைவில் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், எம்எல்ஏக்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி ஆகியோர் பேசினார்.
இதில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:
அதிமுக அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பாக உள்ளது. திமுக ஆட்சியின்போது தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படவில்லை. ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொழிலாளர்களின் கஷ்டம் தெரிந்து செயல்படுகிறார். கல்வி கற்பதில் இருந்து வேலைவாய்ப்பு வரை பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அளிக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட்டது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்பட்டது. அதையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்து நிறுத்திவிட்டார். தேர்தல் முடிந்தபிறகு அந்த பணம் மீண்டும் வழங்கப்படும். அதிமுக மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்து இருக்கின்றனர் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...