நந்தா கல்லூரியில் ரத்த தான இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 1,500 மாணவர்கள் கொடையாளர்களாக இணைந்துள்ளனர்.
நந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் நந்தாவின் உயிர்த்துளி என்னும் பெயரில் ரத்த தான இயக்கம் துவக்க விழா நந்தா பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடந்த 40 ஆண்டுகளில் 173 முறை ரத்த தானம் செய்து பல்வேறு தேசிய விருதுகளைப் பெற்றுள்ள ஈரோட்டைச் சேர்ந்த கண் மருத்துவர் எஸ்.எஸ்.சுகுமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.
ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்து பேசியதாவது:
ஈரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ரத்தம் தேவைப்படுமானால் நந்தாவின் உயிர்த்துளி ரத்த தான இயக்கத்தினைஇணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணின் மூலமாக தொடர்பு கொள்ளலாம். அவ்வாறு தொடர்பு கொள்வதற்கு எளிமையாக தொழில்நுட்ப உதவியுடன் நந்தாவின் உயிர்த்துளி பெயரில் செயலி உருவாக்கப்படும் என்றார்.
விழாவில் நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி எஸ்.ஆறுமுகம், ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலர் எஸ்.நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.திருமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.