மக்களவைத் தேர்தலையொட்டி பணம் கடத்தலை தடுக்க தமிழகம், கர்நாடக மாநில எல்லையான புளிஞ்சூர் சோதனைச் சாவடி வழியாக செல்லும் பேருந்து உள்ளிட்ட வாகனங்களை இரு மாநில போலீஸார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி தமிழகம் கர்நாடக மாநிலங்களிடையே தேர்தலுக்குப் பணம் கடத்தப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கையில் இரு மாநில பறக்கும் படையினர் மற்றும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். ஒரே காரில் 4-க்கும் மேற்பட்டோர் தனித்தனியாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரொக்கம் எடுத்துச் சென்றால் அவர்களைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இருமாநில எல்லையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவல் துறை, வனத் துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து துறை சோதனைச் சாவடிகள் அமைந்துள்ளன. தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போது தேர்தல் பறக்கும் படையினர் புதிதாக சோதனைச் சாவடி அமைத்து அவ்வழியே வரும் பேருந்து, கார், லாரி, டெம்போ உள்ளிட்ட அனைத்து விதமான வாகனங்களையும் சோதனையிட்டு வருகின்றனர். அரசுப் பேருந்துகளிலும் சோதனை நடைபெற்றது. சோதனைச் சாவடி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களின் பதிவு எண் விவரம் மற்றும் வாகனங்களை சோதனையிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.