மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மண்ணின் வளம் காக்கவும், களைகளைப் போக்கவும் கோடை உழவு அவசியம் என்று மொடக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: மொடக்குறிச்சி வட்டார வேளாண்மை பகுதியில் உள்ள விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டு அறுவடையை பெரும்பாலும் முடித்துள்ளனர். தற்போது வயலில் உள்ள கழிவுகள் பூச்சிகளுக்கு உணவாகவும் தங்குமிடமாகவும் உள்ளது. இதனால் பூச்சிகள், பூஞ்சாணங்கள் வளர்ச்சி அடைந்து பாதிக்கப்படுகிறது. இதற்கு ஒரே தீர்வு கோடை உழவு செய்வதாகும். இதன் மூலம் மண்வளம் காக்கப்படுகிறது. முன்பருவ விதைப்புக்கு நிலம் தயார்படுத்தப்படுகிறது. மண்ணின் அடியில் தங்கியுள்ள கூட்டுப் புழுக்கள் மேலே கொண்டுவரப்பட்டு, பறவைகளுக்கு உணவாகி அழிக்கப்படுகிறது. நிலத்தின் நீர் கொள்திறன் அதிகரிக்கப்படுகிறது. இதன்மூலம் பயிர் விளைச்சல் 20 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது என்றார்.