பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பதால் குண்டேரிப்பள்ளம் அணை நீர்மட்டம் 3 அடி குறைந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கொங்கர்பாளையம் கிராமத்தில் குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. இதன் மூலம் 2, 498 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 2018 செப்டம்பர் 29 ஆம் தேதி 160 மி.மீ மழை கொட்டியது. இதனால் ஒரே இரவில் அணையின் நீர்மட்டம் 18 அடி உயர்ந்து முழு கொள்ளளவான 42 அடியைத் தொட்டது. கடந்த டிசம்பர் 18 ஆம் தேதிக்கு பிறகு நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை.
இந்நிலையில், பாசனத்துக்கு கடந்த மார்ச் 9 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 41.29 அடியாக இருந்தது. இடதுகரை, வலது கரையில் தினமும் 28 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 38.76 அடியாக உள்ளது. தண்ணீர் திறப்பால் 3 அடி நீர்மட்டம் குறைந்துள்ளதாக பொதுப் பணித் துறையினர் தெரிவித்தனர்.