சத்தியமங்கலம் மலைக் கிராமங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டன.
பவானிசாகர் சட்டப் பேரவைத் தொகுதியில் 294 வாக்குச் சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச் சாவடிகள் 26 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்துக்கும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனி அறையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேர்தல் அதிகாரிகள், அனைத்துக் கட்சி முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. சத்தியமங்கலத்தில் இருந்து நீண்ட தொலைவில் உள்ள தலமலை கிராமத்துக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை முதலில் ஏற்றி அனுப்பினர். அதனைத் தொடர்ந்து லாரி, வேன் உள்பட 26 வாகனங்கள் மூலம் வாக்குப் பதிவு இயங்திரங்கள் போலீஸ், துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தனர்.