ஈரோடு மாவட்டம், சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மற்றும் வாக்கு எண்ணும் அறை ஆகியவற்றின் பாதுகாப்பு குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியர் சி.கதிரவன் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், காங்கயம் , தாராபுரம் ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஈரோடு மாவட்டம், சித்தோடு சாலைப் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்புடன் தனி அறையில் சட்டப் பேரவைத் தொகுதிவாரியாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் எஸ்.காசிலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ம.தினேஷ், தேர்தல் வட்டாட்சியர்(தேர்தல்) ரவிச்சந்திரன் உடனிருந்தனர்.