ஈரோடு புத்தகத் திருவிழாவை வணிகமாக கருதாமல் சமூக மாற்றத்துக்கு விதை தூவும் திருவிழா என மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன்.
ஈரோடு புத்தகத் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வுக்கு தொழிலதிபர் வி.ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். தொழிலதிபர்கள் வீ.கே.செல்வகுமார், அழகன் கருப்பண்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நக்கீரன் இதழ் ஆசிரியர் நக்கீரன் கோபால் அளவுக்கு மீறினால் என்ற தலைப்பிலும், சென்னை தமிழ் மைய இயக்குநர் ஜெகத் கஸ்பர் தலை நிமிர் காலம் என்ற தலைப்பிலும் பேசினர்.
இதில் த.ஸ்டாலின் குணசேகரன் பேசியதாவது: கடந்த 2005 ஆம் ஆண்டு ஈரோட்டில் 75 அரங்குகளோடு தொடங்கிய புத்தகத் திருவிழா தொடங்கியது. தற்போது 230 அரங்குகளாக விரிவாக்கி, மாநிலம் தழுவிய வாசிப்பு இயக்கத்தை வளப்படுத்தி வருகிறது மக்கள் சிந்தனைப் பேரவை.
சமூகம் மீது அக்கறை கொண்டவர்களை ஒன்றிணைத்து, அவர்கள் மூலம் சமூகத்தை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கும் ஒரு அமைப்புதான் மக்கள் சிந்தனைப் பேரவை. அதில் முதன்மையானதாக ஈரோடு புத்தகத் திருவிழா இருக்கிறது.
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஐந்தாம் ஆண்டைத் தொட்டபோது, மேலும் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டோம். அவ்வகையில் மக்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்ற அப்துல் கலாமை அழைத்து "வீட்டுக்கு ஒரு நூலகம்' எனும் தலைப்பில் பேச வைத்தோம். ஒரு லட்சம் பேர் தன்னெழுச்சியாகத் திரண்டார்கள்.
ஈரோடு புத்தகத் திருவிழாவை வெறும் புத்தக வணிக மையமாக நான் கருதவில்லை. புத்தகங்கள் சமூகத்தை மாற்றி அமைக்கும். சமூக மாற்றத்துக்கு விதை தூவும் திருவிழாதான் இது என்றார்.