தியானத்தின் மூலம் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம் என தமிழகம், தென் கேரள, புதுச்சேரி மாநிலங்களின் பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சேவை ஒருங்கிணைப்பாளர் பீனா தெரிவித்தார்.
பிரஜபிதா பிரம்மா குமாரிகள் ஐஸ்வர்யா விஸ்வ வித்யாலயா சார்பில் தியானத்தின் மூலம் மனதை ஒருநிலைப்படுத்த முடியும் எனும் தலைப்பில் சிறப்பு பயிற்சி வகுப்பு ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற சேவை ஒருங்கிணைப்பாளர் பீனா பேசியதாவது:
தியானத்தின் மூலம் மனதை தொடர்ந்து புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்வதுடன் மனதுக்கு ஓய்வு கொடுத்து அமைதியாக்க முடியும். ஆன்மிகக் கல்வியே வாழ்க்கைக்கு உகந்த கல்வி. பெரிய தலைவர்கள் ஆன்மிகக் சக்தியைக் கொண்டு சாதனைகள் புரிந்தனர். மகாத்மா காந்தி, அப்துல் கலாம், அன்னை தெரசா ஆகியோருக்கு பக்கபலமாக ஆன்மிகக் கல்வி இருந்தது. ஆன்மிகக் கல்வியைதான் பிரம்மா குமாரிகள் உலகம் முழுவதும் 137 நாடுகளில் போதித்துக் கொண்டுள்ளனர். ஆன்மிக கல்வி, தியானம் மூலம் நமது பழக்க வழக்கங்களை மாற்ற முடியும்.
தீயப் பழக்க வழக்கங்கள், மன உளைச்சல், மனச்சோர்வு முதலியவற்றை தியானத்தின் மூலம் போக்கலாம். இதன் மூலம் மன ஆரோக்கியமும், உடல் ஆரோக்கியமும் வளரும்
மனிதர்கள், மிருகங்கள், செடி, கொடிகள் என ஜீவராசிகள் அனைத்தும் தன்னலமில்லாத அன்புக்காக ஏங்குகின்றன. அவை ஆன்மிகம் மற்றும் தியானத்தின் மூலம்தான் கிடைக்கும். மனதை ஓய்வு படுத்த, அமைதிப்படுத்த தியானம் தான் ஒரே வழி. தினமும் 10 நிமிடம் தியானம் செய்தால் போதும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் என்றார்.
ஈரோடு பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.