மதகின் இரும்பு ஷட்டரை திருடிய வழக்கில் மூவருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து கோபி நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
கோபி அருகே சிங்கிரிபாளையத்தில் உள்ள தடப்பள்ளி வாய்க்காலில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள 14 இரும்பு ஷட்டர் திருட்டுப் போனது. இது தொடர்பாக 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி கடத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இந்த திருட்டு சம்பந்தமாக கோபியைச் சேர்ந்த பாலாஜி (28), பிரபு (32), குமார் (40) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோபிசெட்டிபாளையம் ஜே.எம். 2 நீதிமன்றத்தில் நடைபெற்று வ ந்தது. இதுகுறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கில், சம்பந்தப்பட்ட மூவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 2,000 அபராதமும் விதித்து நீதிபதி விஸ்வநாத் தீர்ப்பளித்தார். மூவரையும் கைது செய்து கோபியில் உள்ள ஈரோடு மாவட்ட சிறையில் போலீஸார் அடைத்தனர்.