கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் கணினி அறிவியல் துறையின் சார்பில், சைபர் கிரைம் குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு, கல்லூரித் தாளாளர், செயலாளர் பி.என்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். கருத்தரங்கின் கருதுகோள் குறித்து கணினி இணைப் பேராசிரியர் எஸ்.ஜெயசங்கரி விளக்கி கூறினார். கல்லூரி முதல்வர் டி.மைதிலி வரவேற்றார். சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின் கணினித் துறைத் தலைவர் பேராசிரியர் நஷிரா, கைப்பேசியின் பயன்பாடுகள், அதனை சரியான முறையில் எப்படி பயன்படுத்துவது என்பதை வலியுறுத்தினார்.
கருத்தரங்கில், சிறப்பு விருந்தினராக கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி கணினி துறைத் தலைவர் பேராசிரியர் பி.முரளி கலந்துகொண்டு இணையதள குற்றம் குறித்தும், அதனை எப்படி கையாளுவது என்பது குறித்தும் விளக்கமாகப் பேசினார்.
கோவை தனியார் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.என்.ரவிசந்திரன் கைப்பேசிகள் மூலம் வரும் பிரச்னைகள், இணையதள குற்றங்களுக்கான காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் எடுத்துரைத்தார். இதில், கல்லூரி துணை முதல்வர் எஸ்.ஏ.தனலட்சுமி, பேராசிரியர்கள், பல கல்லூரிகளிலிருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
பெருந்துறை கல்லூரிப் பேராசிரியர் ஜி.கிளாஸ்டன் நிறைவுரையாற்றினார். கருத்தரங்க அறிக்கையை கணினித் துறைப் பேராசிரியர் ஜி.தீபா வாசித்தார். பேராசிரியர் டி.கார்த்திகா நன்றி கூறினார்.