ஜி.எஸ்.டி.யில் 28 சதவீத வரியை நீக்க வணிகர்கள் கோரிக்கை

ஜி.எஸ்.டி.யில் 28 சதவீதம் வரியை நீக்க வேண்டும் என்று அனைத்து தொழில் வணிகச் சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 

ஜி.எஸ்.டி.யில் 28 சதவீதம் வரியை நீக்க வேண்டும் என்று அனைத்து தொழில் வணிகச் சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 
ஈரோடு மாவட்ட அனைத்துத் தொழில் வணிகச் சங்க கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கூட்டமைப்பின் தலைவர் டி.ஜெகதீசன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சி.பாலகிருஷ்ணன், பொருளாளர் சி.துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார். 
கூட்டத்தில், பொலிவுறு நகரமாகும் ஈரோடு, நமது பார்வை என்ற தலைப்பில் கே.கே.எஸ்.கே.ரபீக், யு.ஆர்.சி.தேவராஜன், எஸ்.குமுதா ஆகியோரும், ஈரோட்டின் துணி வணிகத்துக்கான உள்கட்டமைப்பு,  நமது தேவை என்ற தலைப்பில் மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கோவை மண்டல இணை இயக்குநர் எம்.பாலசுப்பிரமணியன், இந்து கல்வி நிலையத் தாளாளர் கே.கே.பாலுசாமி, எம்.சி.ஆர். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.சி.ராபின் ஆகியோர் பேசினர். 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பொலிவுறு நகர் திட்டத்தின்கீழ் இருசக்கர, 4 சக்கர வாகன நிறுத்தும் இடம், சுற்று வட்டச் சாலை, ஈரோடு ரயில் நிலையம், பிரப் சாலையை இணைக்கும் 80 அடி திட்ட சாலை போன்ற திட்டங்களைச் சேர்க்க வேண்டும். ஜி.எஸ்.டி.யில் 28 சதவீதம் வரியை நீக்க வேண்டும். அதிகபட்ச வரியாக 18 சதவீதம் மட்டுமே விதிக்க வேண்டும். அனைத்து வகையான சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி.யை 12 சதவீதம் அல்லது அதற்கு குறைவாக விதிக்க வேண்டும். ஜி.எஸ்.டி.யில் இருந்து திரும்பப் பெறும் தொகையை வணிகர்களுக்கு அதிகபட்சமாக 30 நாள்களுக்குள் வங்கிக் கணக்கில் நேரடியாகச் சென்றடையும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.
ஈரோடு ஆர்.கே.வி. சாலை, மணிக்கூண்டு பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் மார்க்கெட் பகுதியில் உள்ள காலி இடத்தில் கட்டண முறையில் வாகன நிறுத்துமிட வசதியை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஈரோட்டில் தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
தீபாவளி பண்டிகை வர உள்ளதால் கடைவீதிகளில் புதை சாக்கடை திட்டம், குடிநீர்க் குழாய் பதிக்கும் திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும். ஈரோடு கடைவீதிகளில் இரவு நேரங்களில் போதுமான வெளிச்சம் இல்லாமல் இருப்பதால், உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும். மணிக்கூண்டு 
பகுதியைச் சுற்றியுள்ள அனைத்து வீதிகளிலும் பொதுக் கழிப்பறை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com