கோபிசெட்டிபாளையத்தில் பாசனங்களுக்கு நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கோபி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் 18 நாள்களில் ரூ. 32 லட்சம் மதிப்பில் 100 டன் அளவுக்கு விதை நெல் விற்பனையாகி உள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனங்களுக்கும், 16 ஆம் தேதி கீழ்பவானி பாசனம் என முதல் போக சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தப் பாசனங்களில் நெல் சாகுபடிக்கான ஆயத்தப் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால், கோபி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் விதை நெல் விற்பனை துவங்கியது.
135 நாள்கள் சாகுபடியாகும் பி.பி.டி 5204 ரகம் 74 டன் கிலோ ரூ. 35, ஐ.ஆர். 20 ரகம் 30 டன் கிலோ ரூ. 34 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 115 நாள்கள் சாகுபடியாகும் ஏ.எஸ்.டி. 16 ரகம் கிலோ ரூ. 33 க்கு 48 டன்னும், ஏ.டி.டீ. (ஆர்) 45 ரகம் கிலோ ரூ. 33 க்கு 17 டன்னும் விற்பனை நடைபெறுகிறது.
விவசாயிகளுக்காக மொத்தம் 169 டன்களில் விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நசியனூர், காஞ்சிக்கோவில், சிவகிரி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 30 கிலோ சிப்பமாக வாங்கிச் செல்கின்றனர்.
விற்பனை துவங்கியது முதல் கடந்த 18 நாள்களில் இதுவரை ரூ. 32 லட்சம் மதிப்பில் 100 டன் விதை நெல் விற்பனையாகியுள்ளது. இன்னும் 69 டன் அளவுக்கு விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கடைக்கோடி விவசாயிகள் விதை நெல் வாங்க வரும்போது இதன் விற்பனை அதிகரிக்கும் என வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.