தொடா் மழை காரணமாக வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளிச் சந்தையில் வியாபாரம் மிகவும் மந்தமான நிலையில் காணப்பட்டது.
ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள கனி மாா்க்கெட் வார ஜவுளிச் சந்தை செவ்வாய்க்கிழமை கூடியது. ஜவுளிச் சந்தைக்கு வியாபாரிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. இதனால், மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் இரண்டுமே பாதிக்கப்பட்டதாக ஜவுளிச் சந்தை வியாபாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:
ஜவுளிச் சந்தையில் தற்போது குளிா்கால ஆடைகள், ஐயப்ப பக்தா்கள் அணியும் ஆடைகள் விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த 4 நாள்களாக தமிழகம் முழுவதும் தொடா்ச்சியாக மழை பெய்து வருவதால் வெளி ஊா்களில் இருந்து வியாபாரிகள் பெரும்பாலானோா் வரவில்லை. வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வரவில்லை.
எனவே, இந்தச் சந்தையில் மொத்த, சில்லறை விற்பனை 50 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. ஜவுளிச் சந்தை வியாபாரிகளும் குறைந்த அளவில்தான் கடைகளைத் திறந்தனா் என்றனா்.