பவானியை அடுத்த பருவாச்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீஸார் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.7,990ஐக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறு, குறு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கும் பாரதப் பிரதமரின் திட்டத்தில் விண்ணப்பிக்க பருவாச்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் பணம் வசூலிக்கப்படுதாக ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.புஷ்பராஜ், ஆய்வாளர் எம்.நடராஜ் மற்றும் போலீஸார் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அங்கு திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, கணக்கில் வராத ரூ.7,990 கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மற்றும் ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.