மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விரும்பும் ஓய்வுபெற்ற காவலர்களுக்கு விரும்பும் இடத்தில் பணி வழங்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஓய்வுபெற்ற காவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு நசியனூர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:
தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள ஓய்வுபெற்ற போலீஸாருக்கு அவர்கள் விரும்பிய இடங்களில் பணி வழங்கப்படும். ஓய்வுபெற்ற காவலர்கள் எந்தெந்தப் பகுதிகளில் வசித்து வருகிறீர்களோ அதே காவல் உள்கோட்டத்துக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றலாம். இதில் குறைகள் இருந்தால் அது தொடர்பான விவரங்களைத் தெரிவித்தால் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், ஆய்வாளர் ராஜ்குமார், ஓய்வுபெற்ற காவலர்கள் பங்கேற்றனர்.