சத்தியமங்கலத்தில் காரை திருடிய மர்ம நபர்களை, சிசிடிவி காட்சிப் பதிவை வைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.
சத்தியமங்கலம், ஜல்லிக்குழி வீதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். இவர், தனது காரை ஜனவரி 6 ஆம் தேதி இரவு வீட்டின் முன்பு நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் கார் புறப்படும் சப்தம் கேட்டு செந்தில்நாதனின் தாயார் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது, காரை காணவில்லை.
இதுகுறித்து, செந்தில்நாதன் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, சத்தியமங்கலம் போலீஸார் எதிரே உள்ள கேஸ் நிறுவனத்தின் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட காரை நோட்டமிட்டபடி சென்ற இருவர் காரின் பின்னால் நின்று கொண்டனர். மற்றொரு நபர் டார்ச் லைட்டுடன் நடந்து சென்று காரில் அமர்ந்து கொள்கிறார். சிறிது நேரத்தில் காரை திருடிச் செல்வது பதிவாகியுள்ளது. இப்பகுதியில் சுமார் 2 மணி நேரமாக நோட்டமிட்டபடி நடந்து செல்வதும் பதிவாகியுள்ளது. மேலும், பகல் நேரத்தில் பதிவான காட்சிகளைக் கொண்டும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.