ஈரோடு அருகே பெரியசேமூர் மயானத்தை திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பெரியசேமூரில் ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் மயானம் உள்ளது. இதனை, பெரியசேமூர், எலந்தக்காடு, கல்லாங்கரடு, அம்மன் நகர், எல்.வி.ஆர். காலனி, கன்னிமார் நகர், சின்னகுளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இம்மயான வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கு கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாகவும், குழிகளும் தோண்டப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது. இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஜனவரி 16 ஆம் தேதி மயான வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பெரியசேமூர் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர். அதில், மயான வளாகத்தில் திடக்கழிவுத் திட்டம் மேற்கொள்ளப்பட்டால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இத்திட்டத்துக்கான கட்டுமானப் பணிகளை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.