மகளின் படிப்பு தொடர கல்விக் கடன் வழங்க வங்கிக்கு உத்தரவிடவேண்டும் என பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம், ஈரோடு, சொக்கநாதர் வீதியைச் சேர்ந்த தங்கமுத்து மனைவி தனலட்சுமி என்பவர் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
எனது கணவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த பெண் காயத்ரி, கடந்த ஆண்டு பி-பார்ம் பட்டப் படிப்பில் சேர்ந்தார்.
இந்நிலையில் எனது கணவர் இறந்துவிட்டதால், கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில், கல்விக் கடன் கேட்டு அருகில் உள்ள ஒரு வங்கி கிளையை அணுகினேன். அவர்கள் பல ஆவணங்களை எடுத்து வரச் சொன்னார்கள். அதன்படி அனைத்து ஆவணங்களையும் வங்கியில் ஒப்படைத்தும் கல்விக் கடன் தர மறுக்கின்றனர்.
கல்விக் கட்டணம் செலுத்த இயலாத நிலையில், எனது மகள் மிகுந்த மன உளைச்சலுடன் கல்லூரிக்கு சென்று வருகிறார்.
எனவே, கல்விக் கடன் தர மறுக்கும் வங்கிக்கு உத்தரவிட்டு, எனது மகளுக்கு கல்விக் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.