ரயில் பாதையில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு வளையங்களைத் திருடிய 3 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு ரயில்வே நிலையம் பகுதி மற்றும் காவிரி ஆர்எஸ் பகுதியில் தண்டவாளத்தில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு வளையங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை போலீஸில் ரயில்வே அதிகாரிகள் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் பேரில் காவிரி ஆர்எஸ் பகுதியில் இரும்பு வளையங்களைத் திருடியதாக திருவண்ணாமலை மாவட்டம், மேல்பஜாரை சேர்ந்த குமார் (38), ஈரோடு ரயில் நிலையம் பகுதியில் இரும்பு வளையங்களைத் திருடியதாக திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (32) ஆகியோரை கடந்த மார்ச் 8 ஆம் தேதியும், ஈரோடு தொட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (38) என்பவரை கடந்த ஏப்ரல் 29ஆம் தேதியும் போலீஸார் கைது செய்து அவர்கள் மூவரும் திருடிய 50 இரும்பு வளையங்களைப் பறிமுதல் செய்தனர்.
இந்த மூன்று வழக்கையும் தனித்தனியாக ஈரோடு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி நாகலட்சுமி விசாரணை நடத்தி ரயில்வேக்கு சொந்தமான பொருள்களைத் திருடிய குற்றத்துக்காக குமாருக்கு 4 மாதம் 10 நாள்(130 நாள்) சிறைத் தண்டனையும், ரூ.100 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதேபோல் சந்திரசேகருக்கு 4 மாத சிறைத் தண்டனையும், ஈஸ்வரனுக்கு 2 மாத சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.