தொழிலாளர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பவானி கிளை அலுவலகம் முன்பு சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவர் ஏ.எஸ்.தங்கராசு தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் எம்.பி.அறிவானந்தம், ஒன்றியச் செயலர்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், எம்.எஸ்.சரவணன், கே.பி.துரைராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.ஏ.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் பொதுச்செயலர் வி.குழந்தைசாமி வரவேற்றார்.
இதில், பவானி கிளையில் பணியாற்றும் ஒலகடத்தைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள், மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு பணியாற்றியுள்ளனர். இவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையாக தொலைவில் உள்ள பல்வேறு கிளைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்தும், பணியிட மாற்றத்தை ரத்து செய்யவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலர் என்.நல்லசிவம், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் கே.சரவணன், இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் எஸ்.ஏ.அன்பழகன், கிளைப் பொருளாளர் ரங்கசாமி உள்பட 200-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.