ஈரோட்டில் நடமாடும் ஏடிஎம் மையத்தில் ரூ.9.55 லட்சம் மாயமான வழக்கில் வங்கி ஊழியரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நடமாடும் ஏடிஎம் வாகனம், ஈரோடு பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மதியம் 1.30 மணியளவில் திடீரென அந்த வாகனத்திலிருந்து புகை வந்தது. மேலும் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.9.55 லட்சம் பணம் மாயமானது. இதுகுறித்து வங்கியின் பொதுமேலாளர் சந்திர பிரபா அளித்த புகாரின் பேரில் ஈரோடு டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து நடமாடும் ஏடிஎம் வாகனத்தில் பணியாற்றும் வங்கி ஊழியரான அந்தியூர், பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்த சரவணனிடம் (30) போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், வாகன ஓட்டுநர் மற்றும் வாகனத்தில் உள்ள மற்றொரு ஊழியர் இருவரும் சாப்பிடச்சென்ற நேரத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணம் ரூ.9.55 லட்சத்தை எடுத்து, தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்த சரவணன், இச்சம்பவத்தை திசை திருப்பும் நோக்கில் இயந்திரத்துக்கு தீ வைத்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீஸார் சரவணனை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.9.55 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.