மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட எழுமாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் ஊர்ப்புற நூலகத்தின் வாசிப்பு இயக்கம் சார்பில் புத்தகம் வாசிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
எழுமாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாசிப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் என்.பெரியகருப்பன் தலைமை வகித்தார். தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை பா.ராதிகா முன்னிலை வகித்தார். அப்போது, புத்தகம் வாசிப்பின் அவசியம் குறித்து மாணவர்களிடையே விளக்கி பயிற்சி அளிக்கப்பட்டது.நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் புத்தகங்கள் வாசித்தனர்.
புரவலர் எம்.வி.சண்முகம் 70 பள்ளி மாணவர்கள் நூலக உறுப்பினர்களாக இணைய சந்தா தொகையை வழங்கி உதவினார். ஊர்புற நூலகம் சார்பில் நடத்தப்பட்ட கதை, கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழாவில் நூலகப் பணியாளர் என்.கீதா, வாசகர் வட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஆசிரியர், ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.