பவானி வட்டத்தில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயத்தில் வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 611 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
பவானி வட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியரும், சின்னபுலியூர் பண்ணாரியம்மன் சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலருமான என்.முருகேசன் தலைமையில் வருவாய்த் தீர்வாயம் கடந்த 6ஆம் தேதி தொடங்கியது.
பவானி வட்டத்துக்கு உள்பட்ட கிராம கணக்குகள் இத்தீர்வாயத்தில் தணிக்கை செய்யப்பட்டன.
மேலும், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை வழங்கக் கோருதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 611 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 81 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 128 மனுக்கள் நடவடிக்கைக்கு ஏற்கப்பட்டன. 432 மனுக்கள் மீது உரிய விசாரணைக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டது.
ஜமாபந்தி நிறைவு நாளான வியாழக்கிழமை பட்டா மாறுதல் 6 பேருக்கும், கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு பெற ஒருங்கிணைப்புச் சான்று 2 பேருக்கும், வாரிசு சான்று 4 பேருக்கும், குடும்ப அட்டைகள் 2 பேருக்கும், அரிசி அட்டை ஒருவருக்கும் வழங்கப்பட்டன.
இதில் பவானி வட்டாட்சியர் வி.வீரலட்சுமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் கிருஷ்ணன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அதிஷ்டராஜ், தேர்தல் துணை வட்டாட்சியர் ராவுத்தா கவுண்டர், மண்டலத் துணை வட்டாட்சியர் நல்லசாமி, துணை வட்டாட்சியர் சண்முகசுந்தரம், வருவாய் ஆய்வாளர் மணிமேகலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.