மழலையர் வகுப்பு ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சி
எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கு எளிமையாக பாடம் நடத்துவது குறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் நடுநிலைப் பள்ளிகளோடு இயங்கும் அங்கன்வாடி மையங்கள் இணைக்கப்பட்டு 89 பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் மூலம் ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 3 நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது. இப்பயிற்சி வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது.
இதில் மாநில அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் பங்கேற்று 89 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். சிறுவர்களை உளவியல் ரீதியாக கையாளுதல், கற்றலில் குறைபாடு உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களை மேம்படுத்துதல், பாடல்கள் மூலம் கற்பித்தல், ஓவியங்கள், வரைபடங்கள் மூலம் பாடம் கற்பிக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.