கைத்தறித் தொழிலுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழுமையான விலக்கு அளிக்க வேண்டும் என பவானி வட்டார கைத்தறி ஜமக்காளம் பெட்சீட் நெசவாளர் மற்றும் சாயத் தொழிலாளர் சங்கம் (ஏஐடியூசி) வலியுறுத்தியுள்ளது.
நெசவாளர் தினத்தை முன்னிட்டு சங்கத்தின் பெரியமோளபாளையம் கிளையில் செவ்வாய்க்கிழமை சிறப்புக் கூட்டம் சங்கத் தலைவர் பி.எம்.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
சங்கச் செயலர் வ.சித்தையன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:
கைத்தறித் தொழிலுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழுமையான விலக்கு அளிக்க வேண்டும்.
சங்க உறுப்பினர்களுக்கு வாரம் முழுவதும் நெய்வதற்கு கூட்டுறவு சங்கங்கள் நூல் வழங்க வேண்டும்.
கைத்தறி நெசவாளர்களின் அடிப்படைக் கூலியை மாற்றி அமைக்க வேண்டும். சட்டவிரோத விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படும் ஜமக்காளங்களை தடை செய்ய வேண்டும்.
கைத்தறி நெசவுத்தொழிலைப் பாதுகாத்திட தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், கிளைத் தலைவர் பி.எம்.கோவிந்தன், செயலர் வேலுசாமி, துணைத் தலைவர் சுலோசனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.