ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற மக்கள் மன்றம் அமைப்பாளரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் சாலைகளைக் கடக்க நடைமேடை அமைக்க வேண்டும். பெரியசேமூர், ராசாம்பாளையம், ஈபிபி நகர் உள்ளிட்ட பகுதிகளில் முறையாக குடிநீர் விநியோகிக்க வேண்டும்.
பிஎஸ் பூங்காவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடத்தை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மன்றம் சார்பில் மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பலமுறை மனு அளிக்கப்பட்ட போதிலும் மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மன்ற அமைப்பாளர் செல்லப்பன் (71) ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், போராட்டத்துக்கு போலீஸார் அனுமதியளிக்காத நிலையில், ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகே நடந்து சென்று கொண்டிருந்த செல்லப்பனை போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்தனர்.