கொடுமுடியில் இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
கொடுமுடி, அக்ரஹார தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியம் மகன் கோபாலகிருஷ்ணன். இவர், தனது இருசக்கர வாகனத்தை தனது கடையின் முன்பு நிறுத்திவிட்டு அருகிலுள்ள வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, வாகனத்தை காணவில்லை.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கோபாலகிருஷ்ணன், வாகனத்தைத் தேடி நகரில் பல இடங்களுக்கு சென்றுள்ளார்.
அப்போது கொடுமுடி கேபிஎஸ் திரையரங்கு அருகில் தனது இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் தள்ளிக்கொண்டு சென்றதை கண்ட கோபாலகிருஷ்ணன், தன்னுடன் வந்த நண்பர்களுடன் அந்த இளைஞரைப் பிடித்து கொடுமுடி காவல் நிலையத்தில் ஓப்படைத்தார்.
விசாரணையில் அவர், அறச்சலூர், வடுகபட்டி நகரைச் சேர்ந்த துரைசாமி மகன் கௌரிசங்கர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது கொடுமுடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.