பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், சட்டத்தின்படி செயல்படாத கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திங்கள்கிழமை (மார்ச் 18) நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு மாநில பொதுக்குழு கூட்டம் தலைவர் திருமலைராஜன் தலைமையில் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர் கூறியதாவது:
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் பின்னணியில் ஆழமான சதித் திட்டம் இருப்பது தெரியவருகிறது. எனவே இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 120-பி பிரிவின் கீழ் வழக்கை மாற்ற வேண்டும். விசாரணை முடியாத நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தன்னிச்சையாக 4 பேர் மட்டுமே சம்பந்தப்பட்டவர்கள், வேறு நபர்கள் யாரும் இல்லை என்று கூறி இருப்பது விசாரணையில் சட்ட விரோதமாகக் குறுக்கிட்டு உண்மையை மறைக்க முற்படுவதோடு, தடயங்களையும் மறைக்க முயல்வது தெரியவருகிறது. எனவே இவ்வழக்கில் அவரையும் ஒரு எதிரியாகச் சேர்க்க வேண்டும். அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள வழக்குரைஞர்கள் 18ஆம் தேதி நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளோம் என்றார். கூட்டத்துக்கு செயலர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சகாபுதீன், துணைத் தலைவர்கள் ராமலிங்கம், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.