ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட விளக்கேத்தி என்ற இடத்தில் மொடக்குறிச்சி தொகுதி தேர்தல் பறக்கும் படை குழுத் தலைவர் மாதவன் தலைமையிலான அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஞாயிற்றுகிழமை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து கரூர் நோக்கி சென்ற காரை விளக்கேத்தி பகுதியில் வழிமறித்து சோதனை நடத்தினர். இதில் காரில் ஆவணங்கள் இல்லாமல் ரூ. 2 லட்சம் 98 ஆயிரம் கொண்டுச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, பணத்தை பறிமுதல் செயத் பறக்கும் படையினர் மொடக்குறிச்சி வட்டாட்சியர் அஷ்ரபுனிஷாவிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா மத்தகிரியை அடுத்த மொட்டகாமாநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த விறகு வியாபாரி முருகன் (38) என்பவர் லாரி வாங்குவதற்காக பணத்தை கொண்டுச் சென்றதாக தெரிவித்தார்.
ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர் காயத்ரி, உதவி காவல் ஆய்வாளர்கள் விஜயகுமார், சுப்பிரமணியம், ரவி, ரத்தினம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.