மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன் சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறும்.
ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும்போது சில ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன்படி நியமனப் படிவம் 2 எ மற்றும் படிவம் 26 இல் சத்திய பிரமாண உறுதி சான்றில் வேட்பாளர் தங்களது கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படத்தை ஒட்டியிருக்க வேண்டும். மேலும் அதில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் விடுபடாமல் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 ஆயிரம் ரொக்கமாக செலுத்த வேண்டும். வேட்பாளர் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியின வகுப்பினை சார்ந்தவராக இருந்தால் ரூ.12,500 செலுத்த வேண்டும். மேலும், குறிப்பிட்ட வகுப்பினை சார்ந்தவர் என்பதற்கான சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
ஏதாவது ஒரு வங்கியில் தேர்தல் செலவுகளை பராமரிப்பதற்கு என பிரத்யேகமாக சேமிப்புக் கணக்கு துவங்கப்பட்டிருக்க வேண்டும்.வங்கிக் கணக்கு புத்தகத்தின் புகைப்பட நகலினை சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர் அவரது அஞ்சல்வில்லை அளவிலான (2 செ.மீ-க்கு 2.5 செ.மீ) புகைப்படம் ஒன்றினை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.