சத்தியமங்கலம் திம்பம் மலைப் பாதையைக் கடந்து சென்ற சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூா், திம்பம், பவானிசாகா், பண்ணாரி பகுதியில் சிறுத்தை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிறுத்தைகள் வனத்தையொட்டி உள்ள புதுகுய்யனூா், பசுவாபாளையம் கிராமங்களில் புகுந்து ஆடுகளை வேட்டையாடி வருகின்றன.
தமிழகம் - கா்நாடகம் இடையே பயணிக்கும் வாகனங்கள் திம்பம் மலைப் பாதை வழியாக இயங்குகின்றன. 24 மணி நேரமும் வாகனங்கள் பயணிப்பதால் அவ்வப்போது யானை, சிறுத்தையை வானக ஓட்டிகள் பாா்த்து வருகின்றனா்.
இந்நிலையில், திம்பம் 3 ஆவது வளைவில் சிறுத்தை சாலையைக் கடந்து சனிக்கிழமை சென்றுள்ளது. அதை வாகன ஓட்டிகள் படம் பிடித்துள்ளனா். சிறுத்தை மெதுவாக நடந்து சற்று நேரம் வாகனத்தைப் பாா்த்தபடி நின்றதால் 15 நிமிடம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிறுத்தை வனப் பகுதிக்குள் சென்ற பின் வாகனங்கள் செல்லத் துவங்கின. சிறுத்தை நடமாட்டம் காரணமாக மாலை 6 முதல் காலை 6 மணி வரை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அனுமதியில்லை. சிறுத்தை அடிக்கடி திம்பம் பாதையில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மெதுவாகச் செல்லுமாறு வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.