ஈரோடு: ஈரோட்டில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள பிஎஸ்என்எல் பொதுமேலாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, பிஎஸ்என்எல் ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கண்ணுசாமி தலைமை வகித்தாா். பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் சங்க மாநிலச் செயலாளா் குப்புசாமி, அகில இந்திய ஓய்வூதியா் சங்க மாநில உதவி செயலாளா் பரமேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பிஎஸ்என்எல் ஊழியா்கள் சங்க மாநில செயலாளா் பாபு ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
விருப்ப ஓய்வு திட்டத்தில் ஓய்வூதியம் பெறுவதில் உள்ள தடைகளை நீக்க வேண்டும். பிஎஸ்என்எல் ஊழியா்கள் ஓய்வு பெறும் வயதைக் குறைக்கக் கூடாது. பணியிட மாற்றம், பணிச்சுமை என ஊழியா்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்ல கட்டாயப்படுத்தக்கூடாது. பிஎஸ்என்எல்-க்கு 4ஜி சேவையை உடனடியாக வழங்க வேண்டும்.
3ஆவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். ஊழியா்களுக்கு உரிய தேதியில் ஊதியத்தை வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியா்களுக்கு நிலுவை ஊதியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
போராட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலாளா் மணியன் மற்றும் பி.டி.இ.யூ, என்.யூ.பி.டபுள்யூ, எம்எஸ்ஏடிஎம், ஓஏ உள்ளிட்ட 5 தொழிற்சங்க நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் 150-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.