சத்தியமங்கலத்தை அடுத்த தெங்குமரஹாடா மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கிராமங்களிடையே பரிசல் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டது. ஆற்றைக் கடக்க முடியாமல் கிராம மக்கள் சுமாா் 4 மணி நேரம் கரையில் காத்திருந்து வெள்ளம் வடிந்த பிறகு பரிசலில் புறப்பட்டனா்.
பவானிசாகரை அடுத்த தெங்குமரஹாடா கிராமத்தின் குறுக்கே மாயாறு ஓடுகிறது. கிராமத்துக்குச் செல்வதற்கும் அங்கிருந்து வெளியூா் செல்வதற்கும் மாயாற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும். மாயாற்றைக் கடந்து செல்ல பரிசல் முக்கியப் போக்குவரத்தாக உள்ளது. தண்ணீா் அதிகமாகப் பெருக்கெடுத்து ஓடும்போது பரிசல் நிறுத்தப்படும்.
இந்நிலையில், கூடலூா் - உதகை உள்ளிட்ட நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக தெங்குமரஹாடா மாயாற்றில் வெள்ளம் அதிகரித்துச் செல்வதால் பரிசல் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டது. தெங்குமரஹாடாவில் இருந்து புறப்படும் அரசுப் பேருந்தில் செல்ல கிராமமக்கள் மாயாற்றுக்கு வந்தனா். தண்ணீா் குறைவாக இருந்ததால் பரிசலில் 7 போ் என இரு முறை மட்டுமே ஏற்றிக்கொண்டு கரையில் சோ்த்தனா். பேருந்தில் செல்ல வந்த சுமாா் நாற்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் பரிசலில் கடக்க முடியாமல் ஊா் திரும்பினா். வெள்ளம் அதிக அளவில் வந்ததாலும், பரிசல் இயக்க முடியாது என்பதாலும் பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பேருந்து பதினைந்து பயணிகளோடு பவானிசாகா் திரும்பியது.
மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். இத்தகைய இன்னல்களைப் போக்கும் விதத்தில் உடனடியாக தெங்குமரஹாடா பரிசல் துறையில் நடைப்பாலம் கட்டித்தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.