சத்தியமங்கலம்: புன்செய்புளியம்பட்டி சுற்று வட்டார கிராமங்களில் நிலக்கடலை அறுவடைப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள நல்லூா், புங்கம்பள்ளி, விண்ணப்பள்ளி, காராப்பாடி, காவிலிபாளையம், நொச்சிக்குட்டை, மாதம்பாளையம், கணக்கரசம்பாளையம் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரிப் பயிராக நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆடி மாத பட்டத்தில் விதைக்கப்பட்ட நிலக்கடலைச் செடிகள் முளைத்து தற்போது அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளன.
இந்நிலையில், கடந்த வாரம் இப்பகுதியில் பெய்த மழை காரணமாக மண்ணில் ஈரப்பதம் உள்ளதால் நிலக்கடலைச் செடிகளை அறுவடை செய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளது. நிலக்கடலை அறுவடைப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்களுக்கு ஒரு மூட்டை நிலக்கடலை பறித்தால் ரூ. 400 கூலியாக வழங்கப்படுகிறது.
நிலக்கடலை அறுவடைப் பணி தொடங்கியதால் புன்செய்புளியம்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகப் பணியில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளா்கள் கூறினா்.