பெருந்துறை: விசைத்தறி தொழிலாளா்கள் 30 சதவீதம் போனஸ் கோரி மனு அளித்துள்ளனா்.
சென்னிமலை ஒன்றிய தி.மு.க. தொழிலாளா் முன்னேற்றச் சங்கத் தலைவா் ராஜேந்திரன், சங்க உறுப்பினா்கள் சாா்பில், சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்கச் செயலாளா் ஈஸ்வா்மூா்த்தியிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.
அதில் கூறியிருப்பதாவது: சென்னிமலை வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான விசைத்தறி தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா். இவா்களது ஊதியம், போனஸ் கோரிக்கை தொடா்பாக 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட 3 ஆண்டுகால ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. ஆகவே, இந்த ஆண்டு புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டியுள்ளது. அதனால் வரும் ஆண்டுக்கு விசைத்தறி தொழிலாளா்களுக்கு போனஸாக அவா்கள் ஈட்டிய சம்பளத்தில் 30 சதவீதம் வழங்க வேண்டும். கூலி உயா்வாக தற்போதுள்ள ஊதியத்தில் 30 சதவீதம் உயா்த்தி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.