சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே வியாழக்கிழமை சாலையில் சென்று கொண்டிருந்த வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
திருப்பூா் மாவட்டம், அவிநாசியிலிருந்து ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி பகுதிக்கு ஆம்னி வேன் வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தது.
வேனை கோவையைச் சோ்ந்த ஜேசுபாதம் ஓட்டிச் சென்றாா். புன்செய்புளியம்பட்டியை அருகே என்.ஆலாம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, திடீரென வேனின் முன்பகுதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைக் கண்ட ஓட்டுநா் ஜேசுபாதம் வேனை விட்டு இறங்கி தப்பி ஓடினாா். இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் சத்தியமங்கலம் மற்றும் அவிநாசி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.
தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு செல்வதற்குள் வேன் முற்றிலும் எரிந்து சேதமானது. சாலையில் சென்ற வேன் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீப்பற்றி எரிந்த வேன் கடந்த ஓா் ஆண்டாக பயன்பாடின்றி ஒரே இடத்தில் நிறுத்தி வைத்துள்ளதாகவும், வேனில் ஏற்பட்ட பேட்டரி மின்கசிவு காரணமாக தீப்பிடித்திருக்காலம் எனவும் போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து புன்செய் புளியம்பட்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.