திலேப்பியா மீன் வளர்ப்புக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குறுகிய காலத்தில் வேகமாக வளரும் கிப்ட் திலேப்பியா ரக மீன் வளர்க்கவும், இம்மீன் பொரிப்பகம், இனப்பெருக்கம், பண்ணை வளர்ப்பு, வளர்ப்புத் தொட்டிகள் ஆகியவற்றை முறைப்படுத்தி கண்காணிக்க மாநில அளவில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இம்மீன்கள் நோய் எதிர்ப்புத் திறன், குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சி, அதிக வருவாய் தரும். இதனால் மீன் வளர்ப்போரிடம் இவ்வகை மீன்குஞ்சு தேவை அதிகரித்துள்ளது. இதை பூர்த்தி செய்யும் பொருட்டு, கிருஷ்ணகிரி அரசு மீன் பண்ணையில் பொரிப்பகம் நிறுவப்பட்டு திலேப்பியா மீன் குஞ்சுகள் விநியோகிக்கப்படுகிறது.
ஒரு ஏக்கருக்கும் குறைவான பரப்பில் இம்மீன் பண்ணை அமைப்பவர்கள், மாவட்ட அளவிலான பரிசீலனைக் குழு ஆய்வுக்குப் பின்னரும், ஒரு ஏக்கருக்கு அதிகமான பரப்பில் அமைப்பவர்கள் மாவட்ட அளவிலான பரிசீலனை குழு, மாநில அளவிலான பரிந்துரைக்குப் பின் மட்டுமே செயல்படுத்த வேண்டும். இம்மீன் வளர்ப்போர் மாவட்ட மீன் வளர்ப்போர் முகமையில் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு மீன் வள உதவி இயக்குநர் அலுவலகத்தை 0424-2271912 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.